An-Naba’

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[78:1]

எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

[78:2]

மகத்தான அச்செய்தியைப் பற்றி,

[78:3]

எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

[78:4]

அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

[78:5]

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

[78:6]

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

[78:7]

இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

[78:8]

இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

[78:9]

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

[78:10]

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

[78:11]

மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

[78:12]

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

[78:13]

ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

[78:14]

அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

[78:15]

அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

[78:16]

(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

[78:17]

நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

[78:18]

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

[78:19]

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

[78:20]

மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

[78:21]

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

[78:22]

வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

[78:23]

அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

[78:24]

அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

[78:25]

கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

[78:26]

(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

[78:27]

நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

[78:28]

அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

[78:29]

நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

[78:30]

ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம் (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[78:31]

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

[78:32]

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

[78:33]

ஒரே வயதுள்ள கன்னிகளும்.

[78:34]

பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

[78:35]

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

[78:36]

(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

[78:37]

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

[78:38]

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

[78:39]

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

[78:40]

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.